செவ்வாய், 19 மே, 2026

வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவில் கல்வெட்டு,கல்வராயன் மலை.(Kalvarayan Hill's inscription)

கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலைக் கிராமத்தின் வெள்ளி ஈஸ்வரர்(வெள்ளீஸ்வரர்)
திருக்ககோவிலில் கண்டறியப்பட்ட இந்த அரிய கல்வெட்டு, பிற்கால சோழர் காலத்து வரலாற்றை பறை சாற்றும் முக்கிய ஆவணமாகும்.

இம்மலையில் காராளர் என்னும் மக்கள் வாழ்கிறார்கள்.இவர்களது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும்.
(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை முதலி,மலையாள முதலி,மலை நாயக்கர்,மலை வெள்ளாளர்,மலையாண்டி வெள்ளாளர்,பச்சை வெள்ளாளர்,காராள கவுண்டர்,காராள முதலி என்பது இவர்களின் பிற பெயர்கள்.)

கல்வெட்டுப் படத்தையும் அதன் விரிவான விளக்கத்தையும் கீழே காணலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

இடம்:  வெள்ளிமலை கிராமம், கல்வராயன்மலை வட்டம்
(வெள்ளி ஈஸ்வரர் கோயில்).
காலம்:  பொ.யு. 1260 (மார்ச் மாதம்).
மன்னன்: மூன்றாம் இராசேந்திர சோழன் (சோழ வம்சத்தின் கடைசி அரசர்).
ஆட்சியாண்டு: 14-ஆட்சியாண்டு.

கல்வெட்டுப் வரிகள்:

முன்பக்கம்:
1. ஸ்வஸ்திஸ்ரீதிரிபு
2. வனச் க்கரவத்
3. திகள்ஸ்ரீஇராசேந்தி
4. ர சோழ தேவர்
5. ண்டு யச -வது வ
6. ட மலை கள்ளூரா
7. கிய ம(மு)ள்ளூர் காநத்
8. து மதுவூர் பற்று நா
9. ட்டு திருக்கோவிற்
10.திருவெள்ளாறுடை
11.ய நாயனாற்கு திருவ
12.முதுக்கு மதுவூர் பற்
13.றில் பன்னிரண்டு குறி
14.ச்சி நாட்டவருங் குறு
15.ம்பகளும் வெள்ளா
16.ற்று மன்றில்கூடியி

பின்பக்கம்:
17. ருந்து குடிக்கு கு
18. றுணியால் வந்த
19. தானியம் ஆட்டை
20. வரை குடுக்க கட
21. வோமாக சம்மதி
22. த்தோம் சந்திரா
23. தித்த வரையி
24. ங் குடுக்க கட
25. வோம் வல்லவரை 
26. யன் சத்தியம்
27. இது நாட்டை நாட்
28. டி வெள்ளாறுடை
29. யான் முத்து நாட
30. ன் எழுத்து
31. (சிதைந்துள்ளது) 

விரிவான விளக்கம்:

இந்தக் கல்வெட்டு மலை மக்களின் தான சாசனம் அல்லது ஒரு சமூகக் கூட்டமைப்பின் ஒப்பந்தமாகும். இதன் முக்கியக் கூறுகள்.

1.சோழப் பேரரசு வலுவிழந்து கொண்டிருந்த காலத்தில்,(கி.பி-1260) இராசேந்திர சோழனின் 14-ஆம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

2.கல்வராயன்மலையின் ஒரு பகுதி 'வடமலை' என்று அழைக்கப்பட்டுள்ளது. வடமலையில் உள்ள கள்ளூராகிய முள்ளூர் காணத்தில்(அடர்ந்த மலை பகுதி) 'மதுவூர்(மதூர்) பற்று' நாட்டில் உள்ள(இன்றைய சடைய கவுண்டர் நாட்டில் ஒரு துணை நாடு) 'திருவெள்ளாறுடைய நாயனார்' (வெள்ளி ஈஸ்வரர்) க்கு 'திருவமுது' எனப்படும் இறைவனுக்கான நைவேத்தியப் படைப்பிற்காக,மதுவூர்(மதூர்) பற்று நாட்டில் குறிச்சியிலுள்ள(மலையிலுள்ள) பண்ணிரெண்டு நாட்டவர்களும்(ஊரை சார்ந்தவர்களும்), குரும்பகளும்,வெள்ளாறு என்னும் ஊரில் ஒன்று கூடி, ஆண்டுக்கு ஒருமுறை,குறிப்பிட்ட அளவுள்ள குறுணி அரிசியை கோவிலுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

3.இதை சந்திரன் சூரியன் இருக்கும் வரை கடைப்பிடிப்போம்.இது வல்லவரையன் சத்தியம் என்று கூறுகிறார்கள்.இந்த கூட்டத்தை கூட்டி தலைமையேற்ற வெள்ளாறுடையான்
(வெள்ளாறு ஊரை சார்ந்த) முத்து நாடன்(நாட்டார்) என்பவர் சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார்.

சில விளக்கங்கள்:

வடமலை:
கல்வராயன் மலை என்னும் பெயர் வருவதற்கு முன் கூட்டியே சோழர் காலத்தில்,இந்த மலையின் ஒரு பகுதி வடமலை என்று அழைக்கப்பட்டுள்ளது.அப்போ தென் மலை என்று ஒரு பகுதி இருந்திருக்க வேண்டும்.

கள்ளூராகிய முள்ளூர்:
முள்ளூர் என்னும் பகுதி கள்ளூர் என மாறியிருக்கிறது.அதை கல்வெட்டில் திருத்தியிருக்கிறார்கள்.
மலையமான்களின் முள்ளூர் மலை இந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் பிற கல்வெட்டுகளில் இந்த மலை பகுதி "மிலாடாகிய சனனாத வள நாட்டு துறவி நாடு" என்று காணப்படுகிறது.இந்த கல்வெட்டில் மேற்சொன்ன நாட்டு பிரிவு இல்லை, "வடமலை கள்ளூர் ஆகிய முள்ளூர் கானம்" என்று உள்ளது.


மதுவூர் பற்று நாடு: 
மதுவூர் என்பது இன்று மதூர் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.இது இன்று சடைய கவுண்டன் நாட்டில் உள்ள நான்கு நாட்டில்,இது ஒரு துணை நாடு ஆகும்.

இதில் உள்ள பன்னிரண்டு கிராமங்கள் பின்வருமாறு:
1.வெள்ளிமலை
2.வாழப்பாடி
3.மாயம்பாடி
4.சாத்தனூர்
5. கெண்டிக்கல் 
6.மதூர்(சில பேர் பேச்சு வழக்கில் மரூர் என்கிறார்கள்)
7.கங்காபாடி
8.வண்ணியூர்
9.ஆரம்பூண்டி
10.மல்லியம்பாடி
11.பரங்கி நத்தம்
12.தேவனூர் 

வல்லவரையன் சத்தியம்:

பன்னிரண்டு நாட்ட்டவர்களும் வல்லவரையன் மேல் சத்தியம் செய்கிறார்கள்.இது வல்லவரையன் என்பவர் இந்த இனத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.அல்லது மக்களின் நம்பிக்கை பெற்ற குறுநில மன்னனாக இருக்க வேண்டும்.

வல்லவரையன் என்னும் குறுநில மன்னன் வேலூர் மாவட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்,தருமபுரி மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்டம்,விழுப்புரம் மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட கல்வெட்டுகளிலும் காணப்படுகிறார்.
இவர் சோழர் காலத்திலும், போசளர் காலத்திலும் மற்றும் நுளம்பர் காலத்திலும் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்.இவர் வாணர் (வாணாதிராயர்) குலத்தை சார்ந்தவர்.

இவர் ஆண்ட பகுதி வல்லவரையன் நாடு என்று அழைக்கபடுகிறது.(சில பேர் வேலூரில் இருக்கும் வல்லம் மற்றும் அதன் சுற்றுபகுதியை ஆட்சி செய்தவன் என்கிறார்கள்.சில பேர் செய்யாறு வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியை ஆட்சி செய்தவர் என்கிறார்கள்.)

கோவை மாவட்ட கல்வெட்டுகளில் வெள்ளாளரில் பூத்தந்தைகளில் மணிய மறையனான இராசராச வல்லவரையன் என்று கல்வெட்டு ஒன்று உள்ளது.

முத்து நாடன்:

முத்து நாட்டிற்க்கு தலைவர் அல்லது நாட்டார் ஆக இருந்தவர்.கல்வராயன் மலையில் முத்து நாடு என ஒன்று இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் சேர்வராயன் மலையில் உள்ள மூன்று நாட்டு பிரிவுகளில் முத்து நாடு (முத்த நாடு,முட்ட நாடு) பிரிவை ஆள்பவராக இருந்திருக்க வேண்டும்.

குறும்பகள்:

இதில் வரும் குறும்பகள் என்னும் பெயருக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது.

1.முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 
இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.

2.குறும்பர் என்னும் இனம்.இவர்களின் பேச்சு மொழி கன்னடம் கலந்த குருபா மொழி ஆகும்.இந்த மொழி இம்மலையில் யாரும் பேசுவதில்லை.இவர்களின் குல தெய்வ வழிபாடும் இந்த மலையில் இல்லை.
நில பகுதியில் இருந்து வந்து சாமி கும்பிட்டவர்களாக இருக்கலாம்.அல்லது மலையில் குடியிருந்து சில காலம் கழித்து வெளியேறி இருக்கலாம்.

 வெள்ளீஸ்வரர் கோவில்:
இந்த பெயருடைய கோவில் சென்னையில் மயிலையிலும்,மாங்காடு ஊரிலும் மற்றும் ஆரணி ஊரிலும் உள்ளது.
இந்த தலங்கள் வெள்ளி(சுக்கிரன்) தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.இங்கு காமாட்சி அம்மன் உடனுறை அம்மனாக காட்சி தருகிறார்.

அதே பெயருடைய கோவில் கல்வராயன் மலையில் இருப்பதும்,இந்த கோவில் இருக்கும் பகுதி,சுக்கிரன் என்னும் பொருளில் "வெள்ளி" மலை என அழைக்கப்படுவதும்,இந்த மலை மக்கள் தைலம்மாள் என்னும் பெயரில் காமாட்சி அம்மனை வழிபடுவதும் வியப்பாக இருக்கிறது.

மன்னர்கள் காலத்தில் சென்னை ஆரணி உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம்(காஞ்சி மண்டலம்) என்று அழைக்கப்பட்டது.
இந்த மலை வாழ் காராளர் இன மக்கள் இந்த காஞ்சி மண்டலத்திலிருந்து(ஆரணி அல்லது சென்னை) மலைக்கு குடியேறி இருக்கலாம்.

கல்வெட்டு செய்தி பகிர்ந்தவர்: 
பொன் வெங்கடேசன் ஐயா,
கல்வெட்டு ஆய்வாளர்,
சேலம் வரலாற்று ஆய்வு மையம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக