புதன், 15 ஏப்ரல், 2026

பெரியசாமி மற்றும் வெள்ளைப் பிள்ளையார் கோவில், ஆல்ரிப்பட்டி.

பெரியசாமி மற்றும் வெள்ளைப் பிள்ளையார் கோவில்

Periyasamy Temple and Vellai pillaiyar Temple,Aladipatti

ஆல்ரிப்பட்டி என்னும் ஊர் கல்வராயன் மலை தொடர்ச்சியில் பேளூர் வட்டாரத்தில் மலையின் மேல் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மிகுதியான அலரி செடிகள் நிறைந்த பகுதியாதலால் இவ்வூருக்கு அலரிப்பட்டி என்னும் பெயர் வந்தது என்று கூறுகிறார்கள்.ஆனால் பேச்சு வழக்கில் ஆல்ரிப்பட்டி என்றும் ஆலடிப்பட்டி என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
 
இங்கு பெரியசாமி என்னும் வரதராஜ பெருமாள் கடவுளுக்கும்,வெள்ளைப் பிள்ளையார் கடவுளுக்கும் கோவில் உள்ளது.

இந்த கோவில்,இம்மலையில் வாழும் மலையாளி என்னும் காராளர் இன மக்களில் காடை வீட்டிற்கு (குலம்) உரிமையான குல தெய்வக் கோவில் ஆகும்.
இம்மலைக் காராளர் மக்கள் பெரும்பாலும் பெருமாளை கும்பிடும் வைணவ சமயத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்கள் வரதராஜ பெருமாள் கடவுளை பெரியசாமி என அழைக்கிறார்கள்(இவ்வூரில் மட்டும்).

இதே போல் பெரியசாமி(வரதராஜ பெருமாள்) மற்றும் வெள்ளை பிள்ளையார் கோவில்,தேனாண்டை மலை எனப்படும் சித்தேரி மலை பகுதியில் பேரேரி புதூர் என்னும் கிராமத்தில் கொக்கிரி வீட்டு குல தெய்வ கோவிலாக உள்ளது.

கொல்லி மலையில் உள்ள பெரியசாமி கோவிலிலும் மூலவருக்கு சைவ படையல் தான் போடுகிறார்கள்.காமாட்சி அம்மனின் அண்ணன் பெரியசாமி என்கிறார்கள்.காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனின் அண்ணன் வரதராஜ பெருமாள் ஆவார்.ஆகவே கொல்லிமலை பெரிய சாமியும் இந்த வரதராஜ பெருமாளாக தான் இருக்க வேண்டும்.

ஆனால் பெரியண்ணன் என்னும் கருப்பசாமியும்,பெரியசாமி என்னும் வரதராஜ பெருமாளையும் ஒன்றாக நினைத்து கொண்டு,வரதராஜ பெருமாள் கடவுளை மக்கள் மறந்து விட்டார்கள் போலும்.

ஏனெனில் பெரிய கருப்பு என்னும் பெரியண்ணன் கருப்பசாமிக்கு பன்றி,ஆடு, கோழி என முப்பூசை செய்வது இக்காராள மக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று.இதன் மூலம் பெரியசாமி கடவுள்  வேறு,பெரியண்ணன் கடவுள் வேறு என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக