புதன், 26 ஜூன், 2013

காராள கவுண்டர் அல்லது மலையாளக் கவுண்டர்(மலையாளி)

                                 காராள கவுண்டர் 

          அல்லது மலையாள கவுண்டர்(மலையாளி)

(Kaarala kavundar or Malayala Kavundar(Malayali))

                                                                
                                           " காராள கவுண்டர் அல்லது மலையாளக் கவுண்டர் " என்பவர்கள் இன்று வடதமிழ் நாட்டில் காணப்படுகின்ற சேர்வராயன் மலை(சேலம்),கொல்லி மலை(நாமக்கல்),பச்சை மலை(திருச்சி),கல்வராயன் மலை(தருமபுரி,கள்ளகுறிச்சி,சேலம்),ஏலகிரி மலை(திருப்பத்தூர்) மற்றும் ஜவ்வாது மலை(திருப்பத்தூர்)யில் காணப்படுகின்ற "மலைவாழ் மக்கள்" ஆவர்.இவர்கள் மலைகளில் குடியேரியுள்ளதால்,மலைகளை ஆள்பவர் என்னும் பொருளில் நிலமக்களால் "மலையாளி" என்று அழைக்கப்படுகின்றனர்.
                          இவர்கள் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் மற்றும் போரின் காரணங்களால் தொண்டைமண்டலத்திலிருந்து(காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,சென்னை) இடம்பெயர்ந்த வேளாளர் கூட்டம் ஆகும்.(16-ஆம் நூற்றாண்ட்டில் முகமத்தியரின் படையெடுப்பால் இடம்பெயர்ந்த இனம் என்று எட்வர் தர்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்).

                        இவர்கள் மலைகளில் குடியேரியப்பின்,மலைகளை திருத்தி இன்றும் வேளாண் தொழில் செய்து வருகின்றனர்.இவர்கள் தங்களை காராளன் எனவும் காராள கவுண்டர் எனவும் அழைத்துக்கொள்கின்றனர்.இவர்கள் தங்களை பெரிய அண்ணன்(பெரிய மலையாளி), நடு அண்ணன்(கொல்லி மலையாளி), சின்ன அண்ணன்(பச்சை மலையாளி) என்று மூன்று பிரிவுகளாக கூறிக்கொள்கின்றனர்.அதற்கு இவர்களிடத்தில் பரவலாக ஒரு செவிவழிசெய்தி சொல்லப்படுகிறது.                        
  "                    சில தலைமுறைக்கு முன்னால் வடக்கிலிருந்து ஒரே குடும்பதை சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகளும்,ஒரு தங்கயும் வந்தனர்.இவர்கள் நாமக்கலில் அருகிலுள்ள காளப்பநாயக்கன்பட்டியில் (சிலர் தம்மம்பட்டி என்றும் கூறுகின்றனர்)தங்கிருந்தபொழுது உணவை தேடி  மூத்த அண்ணன் சென்றார்.அவர் திரும்பி வராததால் இரண்டவது அண்ணனும் சென்றார்,அவரும் வராததால் மூன்றாவது அண்ணனும் தங்கையை தனியாக விட்டு சென்றார்.அப்பொழுது நாயக்கர் இனத்தை சேர்ந்த ஒருவர் தனியாக இருந்த அவர்களின் தங்கையை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.மூன்று பேரும் திரும்பி வருகையில் தங்கையை காணவில்லையாததால் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு புறமாக தங்கையை தேடி சென்றார்கள்.ஆனால் தங்கை கிடைக்கவில்லை.இதில் பெரிய அண்ணன் சேரவராயன் மலையிலும்,நடு அண்ணன் கொல்லி மலையிலும்,சின்ன அண்ணன் பச்சை மலையிலும் தங்கிவிட்டார்கள்" என்று கல்வராயன் மலையிலுள்ள ஏற்காடு ஊராட்சி ஒன்றியம்,சிறுமலை கிராமத்தில் வசிக்கும் துரைசாமி கவுண்டர்- இராமாயி அம்மாள் தம்பதியர்(சின்ன அண்ணன் இனம்) கூறுகிறார்கள்.

                     தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்னும் புத்தகதில் எட்வர் தர்ஸ்ட்டன் அவர்கள் இவர்களின் குடியேற்றத்தின் காரணிகளாக ஐந்து வகையான நிகழ்வுகளை கூறுகிறார்(அவற்றில் ஒன்று ஜவ்வாது மலையாளிகளை பற்றியது).அவை பின்வறுமாறு,

நிகழ்வு-1 :


                     முகமத்தியரின் ஆட்சி மேலோங்கி இருந்தபோது ,பத்து தலைமுறைக்கு முன்னால் மலைகளில் குடியேறியவர்கள் ஆவர்.இவைகளின் முன்னோர்களான மூன்று அண்ணன் தம்பிகள் காஞ்சியிலிருந்து புறப்பட்டவர்களாக பெரியண்ணன் சேர்வராயன் மலையிலும்,நடு அண்ணன் கொல்லி மலையிலும்,மூன்றாம் அண்ணன் பச்சை மலையிலும் தங்கிவிட்டனர்.அதன்படியே மலையாளிகள் தங்களை பெரிய மலையாளி,கொல்லி மலையாளி,பச்சை மலையாளி என அழைத்து கொள்கின்றனர்.

நிகழ்வு-2:

                     மலையாளிகளின் கடவுளான கரிராமன்(கரி வரதராச பெருமாள்) காஞ்சியில் இருக்க பிடிக்காதவராக புதிய இடத்திற்கு இடம்பெயர்ந்தார்.அவரை தொடர்ந்து வந்த மூன்று அண்ணங்களும் சேலத்திற்கு வந்து பெரியண்ணன் சேர்வராயன் மலைக்கும்,நடு அண்ணன் கொல்லி மலைக்கும்,சின்ன அண்ணன் பச்சை மலைக்கும்,அஞ்சூர் மலைக்கும் பிரிந்து சென்று தங்கினர்.

நிகழ்வு-3:

                    இவர்களை பற்றிய வரலாறு பச்சை மலையில் நாட்டு கட்டு என்னும் கிராம பாடலில் பின்வறுமாறு கூறப்பட்டுள்ளது. காஞ்சியில் அரசாண்ட அரசனுக்கும்,அவனோட தம்பி கோவில் பூசாரிக்கும் இடயே ஏற்பட்ட தகறாறில்,பூசரியானவர் தன் மூன்று மகன்களையும்,ஒரு மகளையும் அழைத்துகொண்டு புதியதொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தார்.அப்பொழுது அங்கிருந்த வேளாளரும் வேடர்களும் எதிர்த்தனர்.அச்சண்டையில் புதிதாக வந்தவர்கள் வெற்றிப்பெற்று மலைகளில் குடியேறினர்.போட்டியின்போது ஏற்பட்ட சோர்வின்போது அங்கிருந்த தொட்டி நாயக்கன் அவர்களுக்கு கஞ்சு கொடுத்து பசியாற்றியதற்காக தன் மகளை மணம் செய்து கொடுத்தார்.பின் ஆண்கள் மூவரும் பெரியண்ணன் சேர்வராயன் மலைக்கும்,நடுவண்ணன் கொல்லி மலைக்கும்,சின்ன அண்ணன் பச்சை மலைக்கும் சென்று தங்கினர்.அந்தந்த மலைகளில் உள்ளவர்களையே தங்கள் மனைவியாக தேர்ந்தெடுத்துகொண்டனர்.பெரியண்ணன் கைகோளர் இனத்திலிருந்தும்,நடுவண்ணன் தேவேந்திர பள்ளர் இனத்திலிருந்தும்,சின்ன அண்ணன் வேடர் இனத்திலிருந்தும் மணந்துகொண்டனர்.

நிகழ்வு-4:

                  தென்னாற்காடு மாவட்டத்தில் வழங்கும் கதை பின்வறுமாறு,மலைகளில் வேடர்கள் வாழ்ந்து வந்தனர்.அவ்வேடர்களை கொன்று அவர்களோட பெண்களை மலையாளிகள் மணந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சி இவர்களின் திருமண சடங்கின் ஒரு பகுதியாக உள்ளது.

நிகழ்வு-5(ஜவ்வாது மலையாளிகள்):

                
                  சக ஆண்டு 1055(கி.பி 1132) ல் கங்குண்டியினை சேர்ந்த வேடர்கள் காஞ்சியிலுள்ள கார்காத்த வேளாளரிடம் பெண் கேட்டனர்.அதற்கு இவர்கள் வேடர்களை ஏளனம் செய்து மறுப்பு தெறிவித்தனர்.இதனால் கோபம் கொண்ட வேடர்கள்,கார்காத்த வேளாளரின் ஏழு பெண்களை தூக்கி சென்றனர்.
                  அப்பெண்களை காப்பாற்ற வெள்ளாளர் எழுவர் ஏழு நாய்களுடன் புறப்பட்டனர்,புறப்படுவதற்கு முன் தாங்கள் வராமல் நாய்கள் மட்டும் வந்தால் நாங்கள் இறந்து விட்டதாக கருதிகொள்ளுமாறு சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றனர்.செல்லும் வழியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நாய்களால் ஆற்றை கடக்க முடியவில்லை.பின் நாய்கள் பாதி வழியிலேயே திரும்பி சென்றது.
அந்நாய்களை கண்ட மனைவிமார்கள்,கணவர்கள் எழுவரும் இறந்து விட்டதாக கருதி விதவை சடங்கு செய்து முடித்தனர்.
                   ஆனால் வேளாளர் எழுவரும் வேடர்களை கொன்று தங்கள் சாதி பெண்களை மீட்டு வீடு திரும்பினர்.வீட்டில் மனைவிமார்களின் விதவை கோலம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.விதவை சடங்கு முடிந்துவிட்டதால் கணவர்கள் எழுவரும் சாதியிலிருந்து விலக்கப்பட்டனர். அவ்வெழுவரும் ஜவ்வாதுமலையிலுள்ள வேடர் சாதி பெண்களை மணந்து மலையில் குடியேரினர்.
                 இவர்களின் வழிதோன்றல்களே இன்றய ஜவ்வாது மலையாளிகள்.இச்செய்தி ஒரு பனை ஓலையில் எழுதியுள்ளதாகவும்,அது பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்.
                 சென்ற கணக்கெடுப்பின் போது ஜவ்வாது மலையாளிகள் தங்களை கார்காத்த வேளாளர் என்றும்,கல்வராயன் மலையாளிகள் கொங்கு வேளாளர் என்றும் பதிந்துள்ளதாக  தர்ஸ்டன் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக